வடகொரியாவில் உள்ள நெருப்புக்கோழி பண்ணை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இடமாக இருந்து வந்தது. இடையில் மூடப்பட்ட இந்த பண்ணை தற்போது நவீனமயமாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் எடை கொண்டதும், பறக்க இயலாத பறவையுமான நெருப்பு கோழிகள் கொண்ட பண்ணை வடகொரியாவின் பியாங்காங் நகரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் 110க்கும் மேற்பட்ட நெருப்புக்கோழிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பண்ணை சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடம். இங்கு நெருப்பு கோழி இறைச்சியை பதப்படுத்தவும் தனி ஆலை இயங்கி வருகிறது. நெருப்பு கோழிகளின் தோல், இறகுகளை வைத்து பல்வேறு பொருட்களும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகை நெருப்புகோழி தோலில் ஷூ, பேக், தொப்பி போன்றவை தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு விற்கப்படுகிறது. இங்கு விற்கப்படும் நெருப்புக்கோழியின் இறைச்சியில் தயாரான உணவுகளையும் சுவை பார்க்கவே அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர்.
இந்நிலையில் இந்த பண்ணை தற்போது நவீனப்படுத்தப்பட்டு சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இங்கு நெருப்புக்கோழி இழுத்து செல்லும் வண்டியில் பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.